கொழும்பில் கால்பதித்தது இந்திய அணி! – கட்டுநாயக்கவில் விசேட பாதுகாப்புடன் உற்சாக வரவேற்பு!

Airfares to Colombo surge after Pakistan Govt gives go ahead for India T20 World Cup clash

டி20 உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியத் தேசிய கிரிக்கெட் அணி நேற்றிரவு 9:45 மணியளவில் இலங்கை வந்தடைந்தது. இந்தியாவின் புதுடெல்லி நகரிலிருந்து ‘ஸ்பைஸ் ஜெட்’ (SpiceJet) விமான சேவைக்குச் சொந்தமான SG-9250 என்ற விசேட விமானத்தின் ஊடாக இந்திய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.

இந்திய அணியின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்திய வீரர்கள் விமான நிலையத்தின் விஐபி (VIP) முனையத்தின் ஊடாக வெளியேறியபோது, அவர்களை வரவேற்கப் பெருமளவிலான ரசிகர்கள் திரண்டிருந்த போதிலும், பலத்த பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

நாளை (பிப்ரவரி 15) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், இன்றைய தினம் இந்திய வீரர்கள் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக ஏற்கனவே கொழும்பில் 2,100 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் வருகை நகரெங்கும் கிரிக்கெட் காய்ச்சலை (Cricket Fever) அதிகரித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சர்வதேச அணிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version