இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் 187 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கைஅணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 164 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
கடந்த 29ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 204 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நிசங்க 73 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக வீராசாமி பெருமாள் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 253 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் பிரத்வைட் 72 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இலங்கை சார்பாக ரமேஷ் மென்டிஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
49 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி இன்று காலை வரை 345 ஓட்டங்களுக்கு 9 இலக்குகளை இழந்து போட்டியை இடைநிறுத்தியது. அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா 155 ஓட்டங்களையும் நிசங்க 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக வீராசாமி பெருமாள் 3 இலக்குகளை கைப்பற்றினார்.
296 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 132 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக 44 ஓட்டங்களை போனர் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை சார்பில் ரமேஷ் மென்டிஸ், எம்புல்தெனிய தலா 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இறுதிப் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 2:0 என்ற நிலையில் தொடரை கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக தனஞ்சய டி சில்வாவும் தொடர் ஆட்டநாயகனாக ரமேஸ் மென்டிசும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த போட்டியுடன் இலங்கை அணியின் தலைமைப்பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் மிக்கி ஆர்தருக்கு பிரியாவிடை தொடர் வெற்றியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஐ.சி.சி சம்பியன்சிப் தொடரின் புள்ளி பட்டியலில் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 24 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இலங்கையணி உள்ளது.
#Sports
Leave a comment