15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதத்தால் சென்னை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்!

Untitled 55

இந்தியப் பிரீமியர் லீக் (IPL 2026) தொடரின் தனது முதல் போட்டியிலேயே 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசத்தலான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. கௌஹாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் 128 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ருத்ரதாண்டவத்தால் 12.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது.

இப்போட்டியின் நாயகனாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். 17 பந்துகளில் 52 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசிய அவர், சுரேஷ் ரெய்னா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார். சூர்யவன்ஷி ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (38*) மற்றும் ரியான் பராக் (14*) ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாகப் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஜோப்ரா ஆர்ச்சர், நந்ரே பர்கர் மற்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராஜஸ்தான் அணிக்குத் திரும்பிய ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் 84 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த சென்னை அணியை, ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி மீட்டெடுத்தார். அவர் 36 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் சென்னை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை எட்டியது. எனினும், ஒரு சுமாரான இலக்கை நிர்ணயித்த சென்னை அணிக்கு, சூர்யவன்ஷியின் அதிரடி துடுப்பாட்டம் பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.

Exit mobile version