19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடத்தப்படவுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முடிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அபுதாபியில் இந்த மினி ஏலத்தை நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக பி.சி.சி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மினி ஏலத்திற்கு முன்னதாக இந்தத் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் வெளியிட வேண்டும்.
இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக டிரேடிங் (Trading) முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யலாம் என்ற விதிமுறையும் இருப்பதினால், ஒரு சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை அணிகளுக்கு இடையே தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

