அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற விறுவிறுப்பான ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன், சொந்த மண்ணில் கோப்பையைக் கைப்பற்றிய முதல் அணி மற்றும் தொடர்ச்சியாகத் தற்காத்து கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனைகளையும் இந்தியா படைத்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணியின் தீர்மானம் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அதிரடியாகச் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது. இது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு அணி பதிவு செய்த மிக உயர்ந்த ஓட்ட எண்ணிக்கையாகும். சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்று அணிக்குப் பலம் சேர்த்தனர்.
256 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்து அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருக்கு உறுதுணையாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில், நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்திய அணியின் அபாரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் அவர்களின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது. இந்தப் போட்டியின் நாயகனாக பந்துவீச்சில் அசத்திய ஜஸ்பிரிட் பும்ரா தெரிவு செய்யப்பட்டார். 2026 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணியினருக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

