டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்லாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியை மாற்றீடு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஐசிசியின் முழுநேர உறுப்பு நாடுகளின் பணிப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன, பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்ல மறுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மாற்று அணியொன்றைப் பெயரிடுவதற்குப் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்தியாவில் விளையாடுவது குறித்த தனது இறுதி முடிவை அறிவிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) ஐசிசி மேலும் ஒரு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஒருவேளை பங்களாதேஷ் தனது பிடிவாதத்தைத் தொடர்ந்தால், ‘C’ பிரிவில் அந்த அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காகப் பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யத் தயக்கம் காட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் உலகக் கிண்ணத் தொடரின் அட்டவணையைப் பாதிப்பதாக ஐசிசி கருதுகிறது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளை பங்களாதேஷ் அறிவிக்கும் முடிவைப் பொறுத்தே ‘C’ பிரிவில் விளையாடப்போகும் அணி எது என்பது இறுதியாகத் தீர்மானிக்கப்படும்.