இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

image 1200x800 18 2

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு (Muscle Strain) காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். கடந்த பிப்ரவரி 16-ஆம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது, தனது முதல் ஓவரின் 4-ஆவது பந்தை வீசிய நிலையில் அவர் உபாதைக்குள்ளாகி மைதானத்திலிருந்து வெளியேறினார். இது சுப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இலங்கை அணிக்கு ஒரு பாரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மதீஷ பத்திரணவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுசங்கவை (Dilshan Madushanka) அணியில் இணைத்துக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தொழில்நுட்பக் குழு இன்று அங்கீகரித்துள்ளது. வசிம் கான் தலைமையிலான இந்தத் தொழில்நுட்பக் குழுவின் அனுமதியை அடுத்து, மதுசங்க உடனடியாக இலங்கை அணியுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கவுள்ளார்.

ஏற்கனவே நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில், தற்போது பத்திரணவும் விலகியிருப்பது அணியின் பந்துவீச்சு வரிசையில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மதுசங்கவின் வருகை இடதுகை வேகப்பந்து வீச்சு என்ற புதிய பரிமாணத்தை அணிக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி தனது அடுத்த குழுநிலைப் போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்ளவுள்ளதுடன், பிப்ரவரி 22-ஆம் திகதி சுப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் இங்கிலாந்தைச் சந்திக்கவுள்ளது.

 

 

Exit mobile version