ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று (மார்ச் 06) பிற்பகல் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர், தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். கட்சியின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டுச் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களை மையமாகக் கொண்டு, கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் பிரசார முன்னெடுப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்தும், கட்சி அடிமட்டத்திலிருந்து எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதற்குத் தேவையான திட்டமிடல்கள் குறித்தும் இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
கட்சியின் கொள்கை ரீதியான முன்னெடுப்புகளைத் துரிதப்படுத்துவது மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் அரசியல் களத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வகிபாகத்தை எவ்வாறு வலுவாக முன்னெடுப்பது என்பது குறித்து அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துடன் இக்கூட்டத்தின் நிறைவில் முக்கிய முடிவுகளை எட்டியுள்ளதாக அறிய முடிகிறது.

