மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரிப்பு தோட்டம் பகுதியில், கசிப்பு வியாபாரியைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸாரைத் தாக்கி, அவரைத் தப்பியோட வைத்த சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (17) மாலை ஆயித்தியமலை பொலிஸார், கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். அங்கிருந்த 62 வயதுடைய வியாபாரியை 180 மி.லி கசிப்புடன் பொலிஸார் கைது செய்து அழைத்துச் செல்ல முயன்றனர்.
இதன்போது, குறித்த நபரின் உறவினர்களான பெண்கள் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரைத் தள்ளி வீழ்த்தி, கைகலப்பில் ஈடுபட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில், சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் பொலிஸாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் அவர்களை வீடியோ பதிவு செய்துவிட்டு தற்காலிகமாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.
வீடியோ ஆதாரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கரடியனாறு பகுதிக்குத் தப்பியோடிய ஒருவரை, கரடியனாறு பொலிஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். கடமையைச் செய்ய விடாது தடுத்தமை மற்றும் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (18) மூன்று பெண்கள் உட்பட மேலும் 5 பேர் ஆயித்தியமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தப்பியோடிய 62 வயது கசிப்பு வியாபாரியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.