வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை 9.45 மணியளவில் பயங்கரத் தீப்பரவலுக்குள்ளாகி முழுமையாக எரிந்தது.
காட்சியறையின் மேல் தளத்தில் மின்னொழுக்கில் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தீயே, இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்புப் பிரிவு வருகை தந்து தீயை அணைக்க முயற்சித்த போதிலும், அது கட்டுக்கடங்காமல் பரவியது.
அங்கு குழுமியிருந்த பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.
இந் நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தினால் காட்சியறை முழுமையாக எரிந்து சேதமாகியுள்ளது. சேத விபரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

