நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்கப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.