கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவரால் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் குற்றவியல் விசாரணை அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
குறித்த கைது தொடர்பில் காவல்துறை உயரதிகாரிகளாலும் சில தகவல்கள் கசிந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக, காவல்துறையின் உள்ளக செயற்பாடுகளில் பெரும் குழப்பம் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஷாரா செவ்வந்தியின் கைது மற்றும் அவர் இலங்கைக்கு அழைத்து வரும் வரை தகவல்கள் எதுவும் வெளியில் கசியாமல் இரகசியம் பேணப்பட வேண்டும் என காவல்துறை மா அதிபரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இதற்கு முன்னதாக இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் கைதான செய்தி விரைவில் வெளியே கசிந்தவுடன் குறித்த குற்றக் குமபலுடன் தொடர்பில் இருந்த பலர் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
மேலும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களின் சாட்சியங்களை மறைப்பதற்கும் திரிபுபடுத்துவதற்கும் செயற்பட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவு போதைப்பொருள் தொகை சம்பவத்தில் சம்பத் மனம்பேரி கொல்களன்களை மறைப்பதற்கும் அவர் தலைமறைவாகியிருந்தமைக்கும் இவ்வாறு தகவல் கசிந்தமையே காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
கைது தொடர்பிலான தகவல் கசிந்தால் இவர்களின் வலையமைப்பு மற்றும் சங்கிலி தொடரில் மேற்கொண்ட குற்றச் செயல்களின் சில சாட்சியங்கள் மறைக்கப்படலாம் என விசாரணை அதிகாரிகள் ஊகித்துள்ளனர்.
இவ்வாறான காரணங்களால் இஷாரா செவ்வந்தியின் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் கசியக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணைகளில் சுமார் 8 மாதங்களாக தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி துபாய்க்கு தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை திசைத்திருப்பி செவ்வந்தி தலைமறைவாகி இருக்கும் இடத்திலிருந்து தப்பி செல்வதற்காகவே, பத்மே இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஓலுகல திட்டத்தை தொடர்ந்துள்ள நிலையில் அவர் தனக்கு ஏற்பட்ட சுகயீனத்தால் விடுமுறை செல்வதாக காவல்துறைக்கு அறிவித்துவிட்டு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் நேபாளம் சென்றுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி நேற்று (14.10.2025) கைது செய்யப்பட்டிருந்ததுடன் தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.