மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் நாடகம் ஆடுகிறது – ரெலோ அமைப்பாளர் சபா குகதாஸ் சாடல்!

20260107 152316

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, காலத்தை இழுத்தடிக்கும் ஒரு அரசியல் நாடகம் என ரெலோ (TELO) கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு, தேர்தலை நடத்துவதில் உண்மையான விருப்பம் இருந்தால், 2017-ஆம் ஆண்டின் 17-ஆம் இலக்க சட்டத்தை உடனடியாகத் திருத்தி பழைய முறையில் தேர்தலை நடத்த முடியும்.

எல்லை நிர்ணயம் போன்ற சிக்கலான விடயங்களை மீண்டும் தெரிவுக்குழுவிற்குள் கொண்டு வருவது, தேர்தலைத் காலவரையறையின்றித் தள்ளிப்போடுவதற்கே உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இவ்வாறான தெரிவுக்குழுக்கள் காலத்தை வீணடிக்கும் செயல்கள் என விமர்சித்ததை அவர் நினைவுபடுத்தினார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக இந்தத் தெரிவுக்குழு பிரேரணை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில், இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் தீர்வை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சி என ரெலோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுக்களும் தெரிவுக்குழுக்களும் நீதியைத் தாமதப்படுத்தும் கருவிகள் என்பதை மக்கள் அறிவார்கள். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்திற்கு நேர்மை இருக்க வேண்டும், என சபா குகதாஸ் தனது ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார்.

 

 

Exit mobile version