விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். கேகாலை தேர்தல் தொகுதி அலுவலகத் திறப்பு விழாவில் இன்று (15) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அரசாங்கத்தின் மீதான தனது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் திறமையற்றதாகவும், ஊழல் நிறைந்ததாகவும் இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மின்சார உற்பத்தி மற்றும் நிலக்கரி இறக்குமதி தொடர்பான பாரிய மோசடிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி தரமற்றவை என்பது உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். “நேற்றைய தினம் உற்பத்தி செய்யப்பட வேண்டிய மின்சாரத்தில் 135 மெகாவோட் மின்சாரம் குறைந்துள்ளது. நிலக்கரி மின் நிலையங்களில் உற்பத்தி செய்ய முடியாத நிலையை உருவாக்கி, மீண்டும் எரிபொருள் மின் நிலையங்களை நோக்கி நாட்டைத் தள்ளுவது திட்டமிட்ட ஊழலாகும். இதன் சுமை இறுதியில் சாமானிய மின்சாரப் பயனாளர்களுக்கே சாரும்” என்று அவர் எச்சரித்தார்.
மேலும், சுகாதாரத் துறையில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தினார். தரமற்ற மருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் இத்தகைய போக்கினால் விவசாயிகளின் உரங்களுக்கும் QR குறியீடு விதிக்கப்படும் என்ற பயம் நிலவுவதாகத் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டின் சூழல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் அவர் அழைப்பு விடுத்தார். அரசாங்கத்தின் இந்தத் திறமையற்ற செயற்பாடுகள் நாட்டை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதே தனது கடமை என்றும் வலியுறுத்தினார்.