திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் பாடசாலை மாணவர்களுக்குச் சட்டவிரோத மதுபானமான ‘கசிப்பு’ அருந்தக் கொடுத்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோமரங்கடவல, அடம்பன பகுதியைச் சேர்ந்த 8-ஆம் தரத்தில் கல்வி பயிலும் சில மாணவர்களை, சந்தேகநபர் அழைத்துச் சென்று கசிப்பு அருந்தக் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.
கசிப்பு அருந்திய மாணவர்கள் உடனடியாகக் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேலதிக சட்ட வைத்தியப் பரிசோதனைகளுக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் வழங்கிய தெளிவான வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்று (22) குறித்த முன்னாள் இராணுவ வீரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.