கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு நிவாரணம் அனுப்பிய விஜய்! 

IMG 20251018 WA00431 vb 16

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு, அக்கழகத்தின் தலைவர் விஜய், தலா ரூ. 20 லட்சம் இந்திய ரூபாயை நிவாரணத் தொகையாக அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த வாரம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருந்த விஜய், அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அந்தத் தொகை அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு வணக்கம். கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்றவாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.

இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்,” என்று விஜய் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version