ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் விநியோகத்தைப் பொறுத்தவரை தற்போதைக்கு இலங்கைக்கு பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதி அளித்துள்ளார்.
ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எண்ணெய் கப்பல்கள் மீது குண்டுகளை வீசி, கப்பல் போக்குவரத்தைத் தடுத்தால் மாத்திரமே இலங்கைக்கு பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டார். ஆனால், தற்போது வரை அத்தகையதொரு சூழல் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பு மல் பார வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு பதற்றத்தைத் தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர். எனினும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. டீசல், பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் கையிருப்புகள் அடுத்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போதுமானதாக உள்ளதால், பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், மத்திய கிழக்கு மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அது இலங்கையின் எரிபொருள் விலையை நேரடியாக பாதிக்கும். இது பணவீக்கத்தை அதிகரித்து, நாட்டின் மீண்டு வரும் பொருளாதாரத்திற்கு சவாலாக அமையலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

