புல்மோட்டையில் சட்டவிரோத டீசல் விற்பனை: 390 லீற்றர் எரிபொருளுடன் வர்த்தகர் கைது!

04 3

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுவதாக புல்மோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (03) இரவு விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சட்டவிரோத விற்பனை தொடர்பாக புல்மோட்டை, அர்பத் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, இவர் அதிக இலாபத்திற்காக டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கைப்பற்றப்பட்ட டீசல் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

எரிபொருளைச் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறான முறைகேடுகள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version