சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக இரத்துச் செய்ய வலியுறுத்தி, நீதி அமைச்சிற்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (30) ஒரு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாகச் சிறையிலிருக்கும் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு பல தசாப்தங்களாக அமுலிலுள்ள PTA (Prevention of Terrorism Act) சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்.
ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அமைந்துள்ள புதிய PSTA (Protection of the State Terrorism Act) சட்ட வரைபை மீளப் பெற வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், இத்தகைய கடுமையான சட்டங்களைத் தொடர்ந்து வைத்திருப்பது சர்வதேச ரீதியில் இலங்கைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.