தனியார் பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: பொதுமக்களுக்கு அமைச்சர் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

04 14

இலங்கையில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ், தனியார் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான டிப்போக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அந்தந்த நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அநாவசியமான முறையில் எரிபொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சரும் அரசாங்கப் பேச்சாளருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். மொரட்டுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், பொதுமக்கள் தமது தனிப்பட்ட தேவைகளைத் தாண்டி நாட்டின் நலன் கருதிச் செயல்பட வேண்டிய தருணம் இதுவென வலியுறுத்தினார். எரிபொருள் நுகர்வைச் சுயக்கட்டுப்பாட்டுடன் மேலாண்மை செய்வது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த இக்கட்டான காலப்பகுதியில் நீண்டதூர அல்லது தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம், நாட்டின் எரிபொருள் இருப்பைப் பாதுகாத்து அத்தியாவசியத் தேவைகளுக்கு வழிவிட முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். “வீட்டில் அல்லது வாகனத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது என்பதற்காக அதனைத் தாராளமாகப் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதனை மேலாண்மை செய்துகொள்ளுங்கள்” என அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த மேலாண்மைத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. QR முறை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விநியோக முறையைச் சீரமைக்க இத்தகைய கட்டுப்பாடுகள் கைகொடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version