மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

world 32

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர்கள் பேரவைக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (ஏப்ரல் 08, 2026) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய போர்ச் சூழலில், யுத்தத்துடன் நேரடித் தொடர்பில்லாத நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். இத்தகைய தன்னிச்சையான தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அரபு நாட்டுத் தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினர்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு அரபு நாடுகள் வழங்கி வரும் பங்களிப்பை ஜனாதிபதி இதன்போது வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக, நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்தல், சுற்றுலாத்துறை மற்றும் பெருமளவிலான இலங்கையர்களுக்கு வழங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். போர்ச் சூழலிலும் அங்கு பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக சர்வதேச சட்டங்களுக்கு அமைய இலங்கை வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். இந்தச் சந்திப்பில் ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, ஓமான், எகிப்து, பாலஸ்தீனம், கட்டார் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், ஈராக், குவைத் மற்றும் லிபியா தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அத்துடன் அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version