புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

world 182

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15) நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள முக்கிய விகாரைகளுக்கு விஜயம் செய்து, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

ஜனாதிபதி நேற்று பிற்பகல் மீரிகம, மினுவாங்கொடவில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யாவச பிரிவேண மகா விகாரைக்குச் சென்றார். அங்கு ஸ்ரீலங்கா ராமன்ன நிகாயவின் அதி வணக்கத்திற்குரிய அக்கமஹா பண்டித மகுலேவே விமல மகாநாயக்க தேரரைச் சந்தித்து, அவரது நலம் குறித்து விசாரித்ததுடன் சுருக்கமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, மகாநாயக்க தேரர் ‘சேத் பிரித்’ பாராயணம் செய்து ஜனாதிபதிக்குத் தனது புத்தாண்டு ஆசிகளை வழங்கினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, சமிந்த லலித் குமார மற்றும் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக நேற்று காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வரலாற்றுச் சிறப்புமிக்க புனித தலாதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்று சியாம் நிகாய அஸ்கிரி பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரைச் சந்தித்தார். பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த அவர், மல்வத்து பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்தச் சந்திப்புகளின் போது, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியின் எதிர்காலப் பணிகளுக்காகத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், கண்டி ஸ்ரீ மகாநாத தேவாலயத்தில் நடைபெற்ற அரச எண்ணெய் பூசும் விழாவிலும் ஜனாதிபதி பங்கேற்று, பொதுமக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடித் தனது புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். நாட்டின் பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாத்து, அனைத்து இன மக்களுக்கிடையிலும் ஒற்றுமையை வளர்ப்பதன் அவசியத்தை இந்த விஜயங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

Exit mobile version