எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

04 17

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார். உலக நாடுகள் எந்தவொரு மோதலில் ஈடுபட்டாலும், இலங்கை தனது நடுநிலைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் என்று தெரிவித்த அவர், தற்போதைய எரிசக்தி சவால்களை முறியடிக்கத் தேவையான அனைத்து இராஜதந்திர மற்றும் பொருளாதார ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக உறுதியளித்தார்.

எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதங்களைச் சமாளிக்க, டாலர் வருமானம் ஈட்டும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைப்புகளுக்குத் தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்துகொள்ள தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே இதற்காகப் பதிவு செய்துள்ளன. நாளை (வியாழக்கிழமை) முதல் இந்தத் தனியார் நிறுவனங்கள் ஊடாக ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையினருக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும். இதன்மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படாமல் அத்தியாவசியத் துறைகளின் இயக்கம் உறுதி செய்யப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படாது என்று உறுதியளித்த ஜனாதிபதி, மார்ச் மாதத் தேவையை விடக் கூடுதலாக 380,000 டன்கள் நிலக்கரி மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 33,000 டன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாளை மறுதினத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளது. அதேவேளை, அரச துறையில் எரிபொருள் பயன்பாட்டை 25 சதவீதத்தினால் குறைக்கும் நோக்கில், புதன்கிழமை தோறும் அரச ஊழியர்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் எவ்விதத் தடையுமின்றி வழக்கம் போல் இயங்கும்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் துறையினரின் நலன் கருதி, அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், உணவு விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருக்க விசேட முன்னுரிமை வழங்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தேயிலைத் தோட்டப் பயன்பாடுகளுக்கு QR முறைமையின் கீழ் வழங்கப்படும் ஒதுக்கீடு போதாதெனில், மேலதிக எரிபொருள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். “அரசாங்கம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை; நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியைக் கடப்போம்” என ஜனாதிபதி தனது உரையை நிறைவு செய்தார்.

Exit mobile version