இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (19), ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசி ஊடாக உரையாடிய ஜனாதிபதி அநுர குமார, இந்த இக்கட்டான சூழலில் வழங்கப்பட்ட ஆதரவிற்குத் தனிப்பட்ட ரீதியில் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஷேக் முகமது பின் சயீத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வரத் தனது பிரார்த்தனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சேதங்களின் அளவைக் கண்டறியவும், மேலதிக உதவிகளை வழங்கவும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து விசேட குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உதவிக்கான ஐக்கிய அரபு இராச்சிய முகவர் நிறுவனம் மற்றும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (Emirates Red Crescent) ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் பின்வரும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அபுதாபி சிவில் பாதுகாப்பு குழுக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அவசரகால தங்குமிட வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. உடனடி நிவாரணத்துடன் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால மீட்பு நடவடிக்கைகளிலும் ஐக்கிய அரபு இராச்சியம் கவனம் செலுத்துவதாக உறுதி அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், சர்வதேச மனிதாபிமானக் கொள்கைகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அர்ப்பணிப்பையும் இந்த உதவி நடவடிக்கைகள் மீண்டும் பறைசாற்றியுள்ளன.

