நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொலி – விசாரணை ஆரம்பம்!

in

நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொலி – விசாரணை ஆரம்பம்!

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியைத் தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தம்சக் மன்றம் எனும் அமைப்பின் தலைவர் பஸ்ஸரமுல்லே தயாவங்ச தேரர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் எழுத்துமூலம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை கோரிய பின்னணியிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு குறித்த தேரர் கோரியிருந்தார். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு இவ்விவகாரத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் குறித்த ஆபாச காணொலியை பெண் ஒருவரே இணையத்தில் பதிவேற்றியுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், சந்தேக நபர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Exit mobile version