இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை தலைமையகம் விசேட வாட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தாங்கள் காணும் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபாயகரமான வாகனம் ஓட்டுதல் தொடர்பான வீடியோ ஆதாரங்களை 070-4755600 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்க முடியும்.
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பாதுகாப்பற்ற முறையில் முந்திச் செல்லுதல், ஒரு சக்கரத்தில் வாகனத்தைச் செலுத்துதல் (Wheelie), மோட்டார் சைக்கிள் சாகசங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களை அபாயகரமாகக் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய வீடியோக்களை அனுப்பும்போது, அந்தச் சம்பவம் நடந்த தேதி, நேரம், இடம் மற்றும் பொலிஸ் பிரிவு போன்ற விபரங்களையும் சேர்த்து அனுப்புமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த வாட்ஸ்அப் சேவை 24 மணிநேரமும் இயங்கும். இதன் மூலம் குற்றவாளிகளைத் தடையயங்கள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளைக் கொண்டு விரைவாகக் கைது செய்ய முடியும் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, போலியாக உருவாக்கப்பட்ட அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றியமைக்கப்பட்ட வீடியோக்களை அனுப்பித் தவறான தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துகளைக் குறைப்பதற்கும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் இந்த முயற்சிக்குத் தீவிர ஆதரவை வழங்க வேண்டும் எனப் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

