யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இன்று (27) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச். புத்திக்க சிறிவர்தனவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், வாடிக்கையாளர்கள் போலச் சென்று மதுபானத்தை வாங்கியபோது, குறித்த சந்தேகநபரை கையும் மெய்யுமாகப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல்கள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களுடன் மேலதிக விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுப்பதற்காக வட மாகாணத்தில் பொலிஸார் தமது கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.