‘டித்வா’ (Ditwah) புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், ஒரு நம்பகமான நண்பனாக இந்தியா சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஊடாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இந்தியப் பிரதமர் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் இந்த மனிதாபிமான உதவி மற்றும் ஒத்துழைப்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், எதிர்காலப் பாதிப்புகளைத் தாங்கும் மீள்திறனை (Resilience) உறுதி செய்வதிலும், கடந்த காலத்தைப் போலவே இந்தியா எப்போதும் இலங்கையுடன் தோளோடு தோள் நின்று செயற்படும்.
புயலால் ஏற்பட்ட திடீர் சவால்களை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்தகட்ட புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான முழுமையான ஆதரவை இந்தியா வழங்கும்.
“இந்தியா எப்போதுமே இலங்கையின் பக்கம் நிற்பதை உங்களால் காண முடியும்” எனப் பிரதமர் மோடி தனது கடிதத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாகத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தி, அண்மைய இயற்கை அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் நட்பு உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது.

