தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த பாரிய சவால்களையும் உருவாக்கியுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சந்தேஷய” (Sandheshaya) ஊடக விருது வழங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களைக் கௌரவித்த பிரதமர், பாடசாலை மட்டத்திலான திறமையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கி வைத்தார்.
பிரதமர் தனது உரையில், ஊடகத்துறை ஜனநாயகப்படுத்தப்பட்டமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “கடந்த காலங்களில் அறிவு மற்றும் தகவல்களைக் கட்டுப்படுத்திய ஒரு சிறிய குழுவிடமிருந்து, இன்று தொழில்நுட்பப் புரட்சியின் ஊடாகத் தரவுகள் அனைவரின் கைகளுக்கும் வந்துள்ளன. இன்று ஒவ்வொரு பிரஜையும் ஒரு ஊடகவியலாளராக மாற முடியும் என்பது வரவேற்புக்குரிய விடயம் என்றாலும், அதில் ஒரு பாரிய ஆபத்தும் மறைந்துள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, திட்டமிட்டுச் சிதைக்கப்பட்ட தகவல்கள் மற்றும் போலியான செய்திகளால் சமூக மோதல்கள் ஏற்படுவதையும் மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதையும் அவர் நினைவுபடுத்தினார்.
சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிரும் முன்னர், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகப் பொறுப்பு என்று பிரதமர் வலியுறுத்தினார். “எமக்குக் கிடைக்கும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்யாமல் பகிரும் ஒவ்வொரு முறையும், நாம் இணையத்தின் மாய வலைக்குள் சிக்கிக்கொள்கிறோம். ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. நம்பகத்தன்மை சீர்குலையும்போது, அத்தகைய சமூகம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும். எனவே, சமூகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உண்மைத் தகவல்களைப் பாதுகாப்பது அவசியம்” என்று அவர் கூறினார்.
எதிர்கால ஊடகவியலாளர்களாகப் பரிணமிக்கவிருக்கும் மாணவர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஊடக எழுத்தறிவு (Media Literacy) மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு என்பன இன்றைய கல்விச் சீர்திருத்தங்களில் கட்டாயத் தேவையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். “நீங்கள் பகிரும் தகவல் உண்மையா, அது யாரைப் பாதிக்கும் என்பதைச் சிந்தித்துச் செயல்படுங்கள்” என மாணவர்களைக் கேட்டுக்கொண்ட பிரதமர், தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் பொறுப்புள்ள கலாசாரத்தை உருவாக்க முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.

