புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு நிலவு’ (Pink Moon) இன்று (ஏப்ரல் 01, 2026) புதன்கிழமை இரவு 10:11 மணிக்கு (கிழக்கு நேரப்படி) அதன் உச்ச நிலையை அடையவுள்ளது. இந்த நிலவு உண்மையில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்காது என்றாலும், வசந்த காலத்தின் தொடக்கத்தில் பூக்கும் “பாசி இளஞ்சிவப்பு” (Moss Pink) எனப்படும் காட்டுப்பூக்களின் நினைவாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெளிவான வானம் உள்ள பகுதிகளில் இந்த நிலவு வழக்கமான பிரகாசமான வெள்ளி நிறக் கோளமாகத் தோன்றும் என நாசா விஞ்ஞானி நோவா பெட்ரோ தெரிவித்துள்ளார்.
இந்த ஏப்ரல் மாத பௌர்ணமியானது விண்வெளித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லையும் குறிக்கிறது. சுமார் அரை நூற்றாண்டிற்குப் பிறகு, நிலவின் சுற்றுப்பாதைக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலத்தை ஏவுவதற்கான முதல் சாத்தியமான காலம் இன்று முதல் ஏப்ரல் 6-ஆம் திகதி வரை அமையும் என நாசா அறிவித்துள்ளது. நான்கு விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றியும் அதன் மறுபக்கத்தைக் கடந்தும் இதுவரை எந்த மனிதனும் சென்றிராத ஆழமான விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். இன்று சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு இதற்கான ஏவுதல் சாளரம் (Launch Window) திறக்கப்படவுள்ளது.
பழங்குடி சமூகங்கள் மத்தியில் இந்த ஏப்ரல் மாத முழு நிலவு ‘மலர் நிலவு’, ‘காற்றுத்தடுப்பு நிலவு’ மற்றும் ‘தவளை நிலவு’ எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. “இந்த முழு நிலவைப் பார்க்கும்போது, ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் ஏற்கனவே விண்ணில் தங்களது பயணத்தைத் தொடங்கியிருக்கக் கூடும். மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் 2028-ஆம் ஆண்டுத் திட்டத்திற்கு முன்னதாகத் தோன்றும் மிக முக்கியமான சந்திர நிகழ்வு இதுவாகும்,” என ஆய்வகத் தலைவர் நோவா பெட்ரோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வானியலாளர்களுக்குப் பல விருந்துகள் காத்திருக்கின்றன. ஏப்ரல் 21 மற்றும் 22-ஆம் திகதிகளில் ‘லைரிட்ஸ்’ (Lyrid) விண்கல் மழை அதன் உச்சத்தை அடையும் போது, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்களைக் காண முடியும். மேலும், மே 5 மற்றும் 6-ஆம் திகதிகளில் ஹேலி வால்மீனின் துகள்களால் உருவாகும் ‘ஈட்டா அக்வாரிட்ஸ்’ (Eta Aquarids) விண்கல் மழையும் நிகழவுள்ளது. குறிப்பாக மே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருவதால், மாதத்தின் இரண்டாவது முழு நிலவான ‘நீல நிலவு’ (Blue Moon) மே 31 அன்று தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

