அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே, இன்று (16) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார். பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவே இவ்வாறான போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அதிகாரபூர்வ இணையதளம் fuelpass.gov.lk மட்டுமே என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். எனவே, பொது மக்கள் எரிபொருள் பாஸ் (Fuel Pass) தொடர்பான சேவைகளைப் பெறும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், அங்கீகரிக்கப்படாத எந்தவொரு இணையதளத்திலும் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பதிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (16) காலை எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார். குறித்த கப்பலில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் அடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த எரிபொருள் கையிருப்புகள் மூலம், தற்போது நிலவும் விநியோக நெருக்கடியைச் சீர்செய்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

