ஹட்டன் – டிக்கோயா நகரப் பகுதியில் முச்சக்கரவண்டிகள் அதிக வாடகைக் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் மத்தியில் இருந்து முறைப்பாடுகள் எழுந்த நிலையில், இது குறித்து ஹட்டன்-டிக்கோயா நகர சபை ஒரு முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இது குறித்துப் பேசிய நகர சபை தவிசாளர் அசோக கருணாரத்தன, “கொரோனா தொற்று பரவல் காலத்தில் அதிகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம் இதுவரை மாற்றமின்றித் தொடர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதன் காரணமாக, நகரப் பகுதியில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் கட்டண மானிகளைப் (Taxi Meters) பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்த நடைமுறை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, வாடகைக்குப் பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன்-டிக்கோயா பகுதியில் வீதிகள் மிகவும் செங்குத்தானதாகவும், குண்டும் குழியுமாக உள்ளதால், அதற்கு ஏற்ப நியாயமான விலை நிர்ணயம் செய்யப்பட்டு கட்டண மானிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்குத் தாங்கள் உடன்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், நகர சபை எடுத்துள்ள இந்தக் கட்டாய நடவடிக்கை மூலம் முச்சக்கரவண்டிச் சேவையில் விரைவில் ஒரு சீரான கட்டண முறை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

