அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு கட்டாயமாக்கப்பட்ட ஆங்கிலப் பரீட்சையில் தோல்வியடைந்த 7,000க்கும் மேற்பட்ட சாரதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகள் விபத்து ஒன்றை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வெளிநாடுகளைச் சேர்ந்த சாரதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாகவே கட்டாய ஆங்கிலப் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பாரவூர்தி சாரதிகளை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்கப் பாரவூர்தித் தொழிலில் இலட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் சாரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

