நாடு முழுவதும் 2,500 மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்: மருந்தாளர் தட்டுப்பாட்டால் உரிமம் ரத்தாகும் எச்சரிக்கை!

26 6961d3a5f270c

இலங்கையில் தகுதிவாய்ந்த மருந்தாளர்களை (Qualified Pharmacists) முழுநேரமாகப் பணியமர்த்த முடியாத காரணத்தினால், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தனியார் மருந்தகங்கள் நிரந்தரமாக மூடப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த ஆண்டு முதல் மருந்தகங்களுக்கான விதிமுறைகளைத் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

ஒரு மருந்தகம் இயங்கும் முழு நேரமும் அங்கு தகுதிவாய்ந்த மருந்தாளர் ஒருவர் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.

2026-ஆம் ஆண்டுக்கான வணிக உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யாத மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தகுதிவாய்ந்த மருந்தாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளதாலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மருந்தக உரிமையாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மருந்தகங்கள் மூடப்படும் பட்சத்தில், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த விவகாரத்தில் அரசு நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என மருந்தக உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

 

Exit mobile version