அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

image 1200x800 14 1

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் நாளை (18) புதன்கிழமை வரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கக் கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இன்று உத்தரவிட்டார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களிடம், 48 மணிநேர விசாரணைகளை முன்னெடுக்கப் பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த வழக்கின் முக்கிய அம்சமாக, உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ரஜீவ் அமரசூரிய ஆகியோர் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். சக சட்டத்தரணி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சட்டத்தரணிகள் திரண்டது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட தரப்புக்காகப் பாரிய சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியிருந்த அதேவேளை, சந்தேகநபர்களான பிரதிவாதிகள் சார்பாக இன்று எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. வழக்கின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது கடுவலை நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களிடமிருந்து கொலையாளிகள் குறித்த மேலதிக இரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

 

 

Exit mobile version