அத்தனக்கல்ல பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வியாழக்கிழமை (நவ 13) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்துப் பேசிய சஜித் பிரேமதாச, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார். இது போன்ற இணையவழி கடன் வழங்கும் பல சட்டவிரோத நிறுவனங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக ஒரு முறையானதொரு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், இந்த விவகாரத்தை ஆராய்ந்து பார்த்து, இந்தச் சட்டவிரோத மாபியாவை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளைச் சபையில் முன்வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இணையவழி கடன் மாபியாக்களின் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறான துயரச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் வலியுறுத்தலாக உள்ளது.

