மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

Untitled 31

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில், 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று (மார்ச் 30, 2026) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் விடுத்து வந்த கோரிக்கையினைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள், குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என அடையளம் காணப்பட்டுள்ள இடத்திலேயே தற்போது தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் நோக்கில் இந்த அகழ்வுப் பணிகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த அகழ்வுப் பணியின் போது சட்டத்தரணிகள், தடயவியல் நிபுணர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர். மனித எச்சங்கள் ஏதேனும் கண்டெடுக்கப்படும் பட்சத்தில், அவை டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களாக நீடிக்கும் இந்த மர்மத்திற்கு இந்த அகழ்வுப் பணிகள் ஒரு விடையைத் தரும் என மனித உரிமை ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது அகழ்வுப் பணிகள் நடைபெறும் குருக்கள்மடம் பகுதி முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தங்களின் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகப் பொதுமக்கள் அந்தப் பகுதிக்குள் நுழைவதற்குத் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வு குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் முதற்கட்டக் கண்டுபிடிப்புகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version