இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னரான அரசியல் நகர்வுகள், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் மனித உரிமை நிலைமைகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று (26) விசேட விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் (Kamzy Gunaratnam) முன்வைத்துள்ள பிரேரணைக்கு (Interpellation) அமைய இந்த விவாதம் இடம்பெறுகிறது.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், நல்லாட்சிக்கான நகர்வுகள் மற்றும் பொருளாதார மீட்சி குறித்த சர்வதேச எதிர்பார்ப்புகள் இந்த விவாதத்தில் முக்கிய இடம்பிடிக்கவுள்ளன. அதேவேளை, இலங்கையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வு, சிறுபான்மை மக்களின் உரிமைகள், இராணுவமயமாக்கல் தொடர்பான கவலைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் குறித்தும் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பவுள்ளனர். இதற்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்கவுள்ளார்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள கம்சி குணரத்னம், இலங்கையின் தற்போதைய சூழலில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், நீடித்த நிலையான அமைதியை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச சமூகத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதே இந்த விவாதத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் புதிய அரசியல் மாற்றங்கள் குறித்து ஐரோப்பிய நாடு ஒன்றின் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ விவாதம் நடைபெறுவது, சர்வதேச மட்டத்தில் இலங்கை மீதான பார்வையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

