சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

world 34

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 08, 2026) அதிரடித் தீர்ப்பினை வழங்கியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான நீண்டகால விசாரணைக்குப் பின்னர், நீதியை நிலைநாட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டித் தமது கைபேசி விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்ததாகத் தெரிவித்து, பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே. பெனிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். காவல்துறை நிலையத்தில் வைத்து இருவரும் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற தாக்குதலால் படுகாயமடைந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கு விசாரணை சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை, சட்டவிரோதமாகச் சிறை வைத்தமை மற்றும் திட்டமிட்ட படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு ஆய்வாளர் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் போது, அவர்கள் இருவரும் காவல்துறை காவலில் வைத்து மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டன.

அதிகார வர்க்கத்தின் அராஜகத்திற்கு ஒரு பாடமாகத் திகழும் வகையில், இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய 9 காவல்துறை அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. “பாதுகாக்க வேண்டியவர்களே படுகொலையில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம்” எனத் தெரிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தினார். இந்தத் தீர்ப்பு சமூக வலைதளங்களிலும் மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version