இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் தமக்குத் தெரியாமல் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பின்வாசல் வழியாகப் பேசி வருவதாகத் தமக்கு நம்பகமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக நெதன்யாகு வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தச் சந்தேகங்களை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானுடன் அத்தகைய இரகசியப் பேச்சுவார்த்தைகள் எதனையும் தாம் முன்னெடுக்கவில்லை என்றும், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய இலக்குகளில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தான் திட்டமிட்டுள்ள இராணுவ இலக்குகளை (குறிப்பாக அணு ஆயுதத் திட்டங்களை அழிப்பது) முழுமையாக அடைவதற்கு முன்னதாகவே, அமெரிக்கா போர்நிறுத்தத்தை அறிவித்துவிடுமோ என்ற அச்சம் இஸ்ரேலியத் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், ஈரானியப் புலனாய்வுப் பிரிவினர் தமக்குச் சொந்தமான அல்லது நட்பு நாடொன்றின் உளவு அமைப்பு மூலம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) அதிகாரிகளைத் தொடர்புகொண்டுள்ளதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விதிமுறைகள் குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ‘நியூயோர்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்தத் தூது முயற்சிகள் அமெரிக்காவால் இதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், இத்தகைய செய்திகள் இஸ்ரேல் – அமெரிக்க உறவில் சிறிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானின் இராணுவ நிலைகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், இராஜதந்திர ரீதியான இந்த நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அமெரிக்கா “மிகத் தாமதமாகிவிட்டது” (Too Late) எனப் பகிரங்கமாகத் தெரிவித்தாலும், திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது. இது போரின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

