இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

25 688daecf5398b

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), நாளை (16) திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருக்கத் தீர்மானித்துள்ளது.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல், முழு சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்தத் தீர்மானத்தினால் நாளை உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் முதல் கீழ் நீதிமன்றங்கள் வரை அனைத்து நீதித்துறை நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்.

ஏற்கனவே திகதியிடப்பட்ட வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது. சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றங்களில் முன்னிலையாக மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு அரசாங்கத்திற்கும் காவல்துறை மா அதிபருக்கும் சட்டத்தரணிகள் சங்கம் அழுத்தம் கொடுத்துள்ளது. இதற்கிடையில், கொலையாளிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் சிற்றூந்து (Car) எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை விசாரணையில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version