இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

image 1200x800 17

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார். அதேவேளை, இந்த விவகாரம் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தூய மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழக முகாம்களில் இருந்தவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப வழிவகை செய்யப்பட்டதை நாமல் ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார். “தற்போது தாயகம் திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. இது கவலையளிக்கிறது. இலங்கை அரசு இது குறித்து ஆராய்ந்து, நாடு திரும்ப விரும்புவோருக்குத் தடையின்றி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக முகாம்களில் உள்ளவர்கள் எமது நாட்டின் பிரஜைகள் எனக் குறிப்பிட்ட அவர், அவர்கள் இந்தியாவில் அகதிகளாகத் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசுகளும், தமிழக அரசும் இணைந்து இந்த உணர்வுப்பூர்வமான விவகாரத்தைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

பல தசாப்தங்களாக முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு நிலையான அந்தஸ்து மற்றும் கண்ணியமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்க இந்தக் கோரிக்கை ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும், இது வெறும் தேர்தல் கால வாக்குறுதியாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். உரிமையுள்ள பிரஜைகளாக அவர்கள் இலங்கையில் வாழ முடியும் என்பதே அவரது முக்கிய நிலைப்பாடாக உள்ளது.

 

 

 

 

 

Exit mobile version