புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய் தனது விருப்பமான நடிகர் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து விஜய்யின் திரைப்படங்களைப் பார்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, விஜய் ஒரு சிறந்த கலைஞர் என்பதைத் தாண்டி, அரசியலில் ஈடுபடும்போது அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சுட்டிக்காட்டினார். “நடிப்பு என்பது வேறு, அரசியல் என்பது முற்றிலும் வேறு என்பதை அவர் உணர வேண்டும். சினிமாவில் நடிப்பது போலல்லாமல், அரசியலில் அவர் ஒரு ‘நிஜக்காலத் திரைக்கதையை’ (real-time script) எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசியல் என்பது முழுநேரப் பொறுப்புடைய பணி” என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அவர் அரசியலில் இன்னும் சோதிக்கப்படவில்லை என்றும், அவரது திறமை மற்றும் செல்வாக்கு எவ்வாறு அரசியல் களத்தில் செயல்படுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கச்சத்தீவு தொடர்பான விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், நாமல் ராஜபக்ஷ தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். 1974 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பகுதி என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது போன்ற உணர்ச்சிகரமான விடயங்கள் குறித்துப் பேசும்போது, மாநில அரசு சார்ந்த அரசியலைப் பார்க்காமல், இரு நாடுகளின் மத்திய அரசுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தனது கருத்துக்கள் ஒருவேளை சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதை நகைச்சுவையாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, விஜய்யின் மீதுள்ள மதிப்பையும், தென்னிந்திய சினிமா மீதான தனது ஈடுபாட்டையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கலாசார உறவுகளின் முக்கியத்துவத்தையும், அதே சமயம் அரசியல் களத்தில் நிலவும் எதார்த்தங்களையும் தனது உரையின் ஊடாக அவர் முன்வைத்துள்ளார்.

