கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றில் இன்று (சனிக்கிழமை, நவம்பர் 22) இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் நடத்தியமைக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.”
“இந்த நாட்டில் ஊடகங்களின் சுதந்திரமும், சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்,” என்று துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.