இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் நபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (17) அதிகாலை கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 12:40 மணியளவில் சென்னையில் இருந்து வருகை தந்த விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். மத்துகம, வலல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மோட்டார் வாகன மெக்கானிக் (Motor Mechanic) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொண்டு வந்த நான்கு பயணப் பொதிகளுக்குள் (Bags) விளையாட்டுப் பொருட்கள், சேலைகள் மற்றும் சட்டைகளுக்கு நடுவே மிகவும் நுணுக்கமாகப் 12,000 சிகரெட்டுகள் அடங்கிய 60 கார்ட்டூன்கள், இந்தியத் தயாரிப்பான 23,800 பீடிகள் அடங்கிய 19 பண்டல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இவற்றின் மொத்தச் சந்தைப் பெறுமதி 20 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.