தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு, தலைநகர் பேங்கொக்கில் பல்வேறு நாட்டு அழகிகள் பங்கேற்ற ஒரு நிகழ்வில், மெக்சிகோ அழகி பாத்திமா போஷ், போட்டியின் மேற்பார்வையாளரால் “முட்டாள்” என்று கூறி அவமதிக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில் (Nawat Itsaragrisil), போட்டியாளர்களில் சிலர் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாதது குறித்துக் கேள்வி எழுப்பினார்.
அப்போது, மெக்சிகோ அழகி பாத்திமா போஷை அழைத்து விளக்கமளிக்குமாறு கேட்டபோது, அவர் பேச முற்பட்டவேளையில், நவத் அவரை “முட்டாள்” என்று கூறினார்.
வாக்குவாதம் மற்றும் வெளிநடப்பு: இதனால் கோபமடைந்த பாத்திமா போஷ், “நீங்கள் என்னை ஒரு பெண்ணாகவும் எனது நாட்டின் பிரதிநிதியாகவும் மதிக்கவில்லை” என நவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் அவமானப்படுத்தப்பட்டதை எதிர்த்து பாத்திமா போஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
அவருக்கு ஆதரவாகப் பல நாட்டு அழகிகளும் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். நடப்பு மிஸ் பிரபஞ்ச அழகி விக்டோரியாவும் அங்கிருந்து வெளியேறினார்.
போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, நவத், “அழகிகள் போட்டியிட விரும்பினால் இங்கே உட்கார வேண்டும்” என்று கூறினார். எனினும், அவரது பேச்சைச் செவிமடுக்காத போட்டியாளர்கள் வெளியேறியதால் அரங்கில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், நவத் பின்னர் மன்னிப்புக் கோரினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மிஸ் பிரபஞ்ச அமைப்பு கூறுகையில், அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் மரியாதைக்குரிய தொழில்முறை சூழலை உறுதி செய்ய ஒரு மூத்த நிர்வாகி தாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

