பதுளை – எல்ல பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லிட்டில் எடம்ஸ் பீக் (Little Adam’s Peak) மலையில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டுச் சிறுமி ஒருவர், சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் இருந்து அற்புதமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையுச்சியில் நின்றுகொண்டு அழகிய காட்சிகளைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்தச் சிறுமி நிலைதடுமாறி சுமார் 100 அடி ஆழமான செங்குத்தான பள்ளத்தில் விழுந்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டனர். கரடுமுரடான மலைப் பகுதி மற்றும் சவாலான நிலப்பரப்புக்கு மத்தியில், கயிறுகளின் உதவியுடன் வீரர்கள் பள்ளத்தில் இறங்கிச் சிறுமியை மீட்டனர்.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிறுமி எவ்வித பாரிய காயங்களுமின்றி பாதுகாப்பாக மேலே கொண்டு வரப்பட்டார். தனது மகள் உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்ட தாய், உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் மல்க மீட்புக் குழுவினரைக் கட்டிப்பிடித்துத் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த ஏனைய சுற்றுலாப் பயணிகளையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.