தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (26) அதிகாலை கினிகத்தேனை பகுதியில் பாரிய விபத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவலை வளைவுப் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அதன் தடையாளி (Brake) கட்டமைப்பு செயலிழந்தது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிவில் வேகமாக இறங்கிய நிலையில், நிலைமையைப் புரிந்துகொண்ட சாரதி, பேருந்தை அருகில் இருந்த மணல் மேடு ஒன்றின் மீது மோதச் செய்து நிறுத்தினார்.
தவிர்க்கப்பட்ட உயிர்ச்சேதம்: சாரதியின் இந்தத் துரித செயலால் பேருந்து பள்ளத்தில் விழுவது தவிர்க்கப்பட்டதுடன், அதிலிருந்த சுமார் 80 பயணிகள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்தைத் தொடர்ந்து, சாரதியும் நடத்துனரும் இணைந்து பயணிகளை மற்றுமொரு பேருந்து மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கினிகத்தேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சாரதியின் உயிர்காக்கும் இந்தச் செயலுக்குப் பயணிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

