world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

Share

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (ஏப்ரல் 17) வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், எவரேனும் நிலக்கரி ஊழல் குறித்து ஆதாரங்களுடன் தகவல் அறிந்திருந்தால் அதனைத் தாராளமாக ஆணைக்குழுவிடம் வழங்கலாம் எனக் குறிப்பிட்டார்.

நிலக்கரி கொள்வனவு மற்றும் மின்சார உற்பத்திக்காக நிலக்கரி விநியோகிக்கப்பட்ட நடைமுறைகளில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் அல்லது நிதி முறைகேடுகள் இடம்பெற்றனவா என்பதை ஆராய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஒரு உயர்மட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தசாப்த காலமாக நிலக்கரி இறக்குமதியில் நிலவியதாகச் சந்தேகிக்கப்படும் முறைகேடுகளை முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரிப்பதே இந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும். இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை அடுத்த ஆறு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொண்ட அமைச்சர் விஜித ஹேரத், இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை என்று பொறுப்புடன் தெரிவித்தார். மின்சார உற்பத்தியின் போது சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், அது அமைச்சரின் நேரடித் தொடர்பினால் ஏற்பட்ட முறைகேடு என்று எந்தவொரு தணிக்கை அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும், பொதுமக்கள் மற்றும் தரப்பினரிடையே நிலவும் சந்தேகங்களைத் தீர்க்கவே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த விசாரணை ஆணைக்குழுவின் பணிகளைச் சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுப்பதற்கு வசதியாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். விசாரணைகளின் போது எவ்விதத் குறுக்கீடுகளும் இருக்கக்கூடாது என்பதற்காகவே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...