நுகர்வோருக்கு நிம்மதி: நாளை முதல் பால் தேநீர் விலை 10 ரூபாவினால் குறைப்பு!

images 11 3

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு நாளை ஜனவரி 16, வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்துச் சிற்றுண்டி சாலைகளிலும் நடைமுறைக்கு வரும்.

சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை சரிந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, உள்ளூர் சந்தையில் 1 கிலோ பால் மா பொதியின் விலையை 125 ரூபாவினாலும், 400 கிராம் பால் மா பொதியின் விலையை 50 ரூபாவினாலும் குறைக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் இது குறித்துத் தெரிவிக்கையில் “அரசாங்கம் பால் மாவின் விலையைக் குறைத்துள்ளதால், அதன் நன்மையை நேரடியாக நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இந்த 10 ரூபா விலைக் குறைப்பை மேற்கொள்கிறோம். அனைத்து உணவக உரிமையாளர்களும் இந்தத் தீர்மானத்தைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு, இந்த விலைக் குறைப்பு ஓரளவிற்கு நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏனைய உணவுப் பண்டங்களின் விலைகளும் எதிர்காலத்தில் குறைக்கப்படலாம் என நுகர்வோர் சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

 

 

Exit mobile version